அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் உப்புல் ரஞ்சித் குமார இதனைத் தெரிவித்தார்.
கால்நடை வைத்தியர்களுக்கான தனியான சேவை யாப்பை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதனை நாசப்படுத்த விவசாய அமைச்சின் செயலாளர் தொடர்ந்து முயற்சிப்பதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, அனைத்து அரசாங்க கால்நடை அலுவலகங்களின் பணிகளும் பாதிக்கப்படுவதுடன், மிருகக்காட்சிசலை திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், துறைமுகம், விமான நிலையங்களில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள கால்நடை வைத்தியர்களின் சேவைகளும் பாதிக்கப்படும் என்று அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உப்புல் ரஞ்சித் குமார தெரிவித்தார்.