2025 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற வேளை இவ்வாறு தெரிவித்தார்.
வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில், 2011 முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், இலகுரக வாகனங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு அமல்படுத்தப்பட்டாலும், லொரிகள் மற்றும் பேருந்துகள் சட்டத்தை மீறி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.