பிப்ரவரி 19, 2025 அன்று இரவு நேரத்தில் சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை கடற்படை, மன்னார் மற்றும் நெடுந்தீவு அருகே இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகளைக் கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, இலங்கை கடற்படை 13 இந்திய மீன்பிடி படகுகளைக் கைப்பற்றியுள்ளதுடன் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 99 இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது.
இதற்கிடையில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார். இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கையின் கடல்சார் இறையாண்மையையும் உள்ளூர் மீனவர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்த இந்திய பாராளுமன்ற உறு்ப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில். “எத்தனை முறை நம்முடைய மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். சிறைபிடிப்பது மட்டுமல்லாமல் இலங்கையிலே அவர்களுடைய படகுகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டு இன்று 200 படகுகளுக்கும் மேல் இலங்கையிலே பறிமுதல் செய்து நமக்கு திருப்பித் தராமல் வைத்திருப்பதுடன் இந்த ஆண்டு இதுவரை கணக்கெடுத்து பார்த்தால் 97 தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கையிலே சிறையிலே அடைக்கப்பட்டு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்,
அண்மையில் ஊடகங்களை சந்தித்த அமைச்சர் பதிலளிக்கும்போது, “கனிமொழி சகோதரி (அமைச்சரிடம்) நாங்கள் மிக வினயமாக கேட்டுக்கொள்வது, உங்கள் மீனவர்களுக்கு எங்கள் எல்லையை மீற வேண்டாம் என்று (மீனவர்களுக்கு) சொல்லுங்கள். நீங்க பக்கத்துல இருக்கும் கேரள கடலுக்கு போவதில்லை பக்கத்தில் இருக்கின்ற ஆந்திர கடலுக்கு போவதில்லை பக்கத்துல இருக்கின்ற பாகிஸ்தான் கடலுக்கும் போவதில்லை ஆனால் எங்களுடைய கடல்தான் உங்களுக்கு தேவை. எங்களுடைய மீன்கள் எல்லாத்தையும் பிடித்து எங்களுடைய வள்ளங்களை அறுத்து நொறுக்கி வலைகளை அறுத்து நாசமாக்கிவிடுகிறீர்கள். 20% ஆக இருக்கும் எங்கள் மீனவர்களுடைய வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டு செல்கிறீர்கள். 30 வருடங்களாக நாங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்கள் யுத்தத்தின் காரணமாக பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றோம். இப்ப தான் ஓரளவு தலை தூக்கிக் கொண்டு வருகின்ற போது சீசன் டைம்ல வந்து உங்களுடைய ஆயிரக்கணக்கான படகுகள் எங்களுடைய கடல் வளத்தை மாத்திரமல்லாமல் (மீனவர்களின் வாழ்வாதாரத்தையும்) நாசமாக்கிக் கொண்டு போகின்றார்கள்” என்று கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
கடல் எல்லைகளைப் பாதுகாத்தல், மீன்வளத்தின் நிலைத்தன்மை மற்றும் இலங்கை மீன்பிடி சமூகங்களின் தேசிய வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்க இலங்கை அரசாங்கம் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.