காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து இன்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு தொடர்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலய முன்றல் நோக்கி தீச்சட்டி ஏந்தியவாறு பேரணியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.இதில் வடக்கு கிழக்கைச்சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என கோரியும் அல்லது அவர்கள் எங்கே என சிங்கள பேரினவாத அரசிடம் பலமுறை கேட்டும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை எனவே நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி 2017-பெப்ரவரி 20 ம் திகதி கிளிநெச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பிக்கப் பட்ட தொடர் போராட்டமானது வடகிழக்கு என விரிவு படுத்தப்பட்டது
2017 பெப்பரவரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டு வருடமாக அதாவது இன்றுடன் 2920 நாட்களைக் கடந்து தொடர்கின்றது 2009 மே 18 ல் முள்ளிவாய்க்காலில் போர் மொளனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன.
இன்றும் இனப்படுகொலை தொடர்ந்த வண்ணம் உள்ளன ஆனால் இலங்கையில் ஜனாதிபதிகளும் ஆட்சியாளர்களும் மாறினாலும் தொடர்ந்தும் இனப் படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி. நேரடியாக படையினர்களிடம் சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது. என்பது தொடர்பான நீதி இது வரை கிடைக்க வில்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் 2017 தொடக்கம் இன்று வரையும் உள் நாட்டில் பல போராட்டங்களை நடத்தினோம் இலங்கை அரசின் நீதித் துறையில் நம்பிக்கையில்லை என்ற ஒரு காரணத்தினால் நாம் சர்வதேச நீதி விசாரணை வேன்டும் என பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றோம்.
சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு மகஜர்களையும் அனுப்பினோம் நேரடியாக ஜெனிவாவில் உள்ள ஐ நா மனித உரிமை ஆணைக் குழுவிலும் நேரடியாக சென்று ஆவனங்களை ஆதாரத்துடன் கையளித்தோம் ஆனால் இது வரை எமக்கான நீதி கிடைக்க வில்லை 2015 ஆட்சியில் இருந்த நல்லாட்சிகாலம் என சொல்லப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ,2022 ல் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வரையான சகல அரசாங்கங்களும் எம்மை ஏமாற்றி உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி மூலம் தற்போதய புதிய ஜனாதிபதியாக கடந்த 2024 செப்ரெம்பர் பதவியேற்ற அனுர குமார திசநாயக்க 2024 நவம்பர் 159 நாடாளமன்ற உறுப்பினர் களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு நல்லென்னமும் அவர்களின் செயலில் தென்படவில்லை மாறாக புலனாய்வாளர்களை ஏவி விட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரை கண்காணிப்பதுடன் அவர்களை சுதந்திரமாக தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ள விடாமல் நீதி மன்ற தடை உத்தரவுகளை கொடுத்து ஐனநாயக வழிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி தடுக்கும் அடாவடிச் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய பெற்றோர்கள் இதுவரை 300க்கும் மேற்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையறியாது வேதனையுடன் உயிர் இழந்த பரிதாபங்கள் வடகிழக்கில் நடந்துள்ளன எங்கள் வேதனைகளையும் வலிகளையும் உண்மைகளையும் இலங்கை அரசு புரியவில்லை அதேபோல் சர்வதேசமும் புரிய வில்லை என்பதையே கடந்த எட்டு வருங்களாக நாங்கள் கண்ட உண்மை
அரசுகள் மாறும் போது எல்லா சர்வதேச இராஜதந்திரிகளும் நாடுகளின் தலைவர்களும் ஏன் ஐநா சபைகளும் கூட இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு செயலாக கால அவகாசங்களை வழங்கி கால நீடிப்பை செய்து வருவதை நாம் எட்டு வருடங்களாக அவதானித்து வந்துள்ளோம் என்ற உண்மையை கவலையுடனும் கண்ணீருடனும் மனவேதனையடனும் இந்த எட்டு ஆண்டு நிறைவில் பதிவு செய்கின்றோம் எனவே இந்த உண்மைகளை உணர்ந்து இனியும் எம்மை ஏமாற்றாமல் எங்கள் உணர்வுகளை மதித்து சர்வதேச நீதி கிடைக்க ஆவன செய்யுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகின்றோம். என தெரிவித்தார்.