ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரசியலமைப்பை மீறுவதாக தெரிவித்து அதனை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (25) முற்பகல் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் குறித்த மனுக்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாகவும், அது நிறைவேற்றப்பட வேண்டுமானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்புக்கும் விட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பினர் கோரியுள்ளனர்.அரசாங்கத் தரப்பில் சொலிசிட்டர் ஜென்ரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மகிந்த பத்திரன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உள்ளிட்டோர் 6 மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.