யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (06) நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.செம்மணி மனிதப் புதைகுழியை மேலும் 45 நாட்கள் அகழ உத்தரவிட்ட நீதிமன்றம், இதற்கான பாதீட்டை நீதி அமைச்சுக்கு அனுப்புமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டது.ஆரம்ப அகழ்வின் போது 6 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், மேலும் எலும்புத் தொகுதிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, இப்பகுதியை மனிதப் புதைகுழியாகப் பிரகடனப்படுத்தக் கோரப்பட்டிருந்தது.
சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் அறிக்கைகளின்படி, மூன்று முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன:
* அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 மீற்றர் ஆழத்தில் மனித எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன.
* குழப்பமான சூழலில் எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளன; ஆடைகள் அல்லது தனிப்பட்ட அணிகலன்கள் எதுவும் கிடைக்கவில்லை, இது சட்டவிரோதமான இரகசியப் புதைகுழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
* தற்போது 17 எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் அடையாளம் காணப்பட்டு, 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இருவரும் பரிந்துரைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் அகழ்வைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். இதன்படி, அகழ்வு பணிகள் திருப்திகரமாக முடியும் வரை தொடர வேண்டும் எனவும், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின்படி நீதி அமைச்சு மூலம் நிதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையில் அகழ்வு பணிகளில் திருப்தி தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிவான் தொடர்ச்சியான அகழ்வு பணிகளுக்கு அனுமதி வழங்கினார்.