இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) வடக்கு மாகாண வீதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மற்றும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01) வடக்கு மாகாணம் முழுவதும் தனியார் பேருந்துகள் சேவை முடக்கல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான முரண்பாடு இன்று (27) காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. அங்கு தவறான கால அட்டவணை அடிப்படையில் இ.போ.ச சார்ந்த ஒரு பேருந்து சேவையை நடத்த முயன்றதைத் தொடர்ந்து, தனியார் மற்றும் இ.போ.ச சார்புகளில் மோதல் நிலை ஏற்பட்டது.இதனால் சில நிமிடங்கள் வாகன நெரிசலும், பொலிஸார் தலையீட்டும் ஏற்பட்டன.சம்பவத்துக்குப் பின்னர், வட மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத் தலைவர் கூறியதாவது:
“இன்று காலை, யாழ். மத்திய பஸ்நிலையத்தில் இருந்து கிளிநொச்சி வீதிக்குரிய பேருந்து ஒன்று, வவுனியா நோக்கி சட்டவிரோத சேவையை மேற்கொள்ள முயன்றது.இது, வீதியின் முகாமையாளர் உத்தரவுக்கு முரணான செயலாக இருந்தது.அதை நாங்கள் கண்டித்து நிறுத்த முயன்றபோதும், இ.போ.ச சார்பினர் எங்களை முறையாக மதிக்காமல், அத்துமீறி சேவையை மேற்கொள்ள முயன்றனர்.”மேலும் அவர் கூறுகையில்,
இச்சம்பவம் மற்றும் தொடர்புடைய சட்டவிரோத செயல்களைப் பற்றி போக்குவரத்து அமைச்சு, அதிகார சபை மற்றும் வட மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், குறித்த பாதையில் தனியார் சேவைகளை பாதிக்கும் விதமாக இ.போ.ச சேவைகள் இடைஞ்சலை ஏற்படுத்துவதாகவும், இதனால் விபத்துகள் மற்றும் எதிர்மறையான மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த நிலைமையைச் சீர்செய்யும் வகையில், தனியார் பேருந்துகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எதிர்வரும் செவ்வாயன்று (01) முழுமையான சேவை முடக்கல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.