பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ தூரம் கிராம மக்கள் நாற்காலியில் சுமந்து சென்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்திய மாநிலமான ஒடிசா, மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சுனாய் போஜ்.இவருக்கு கடந்த 6 ஆம் திகதி அன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் கைராபுட் அரசு சுகாதார மையத்தை தொடர்பு கொண்டனர்.பின்னர், கர்ப்பிணியின் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், மோசமான சாலை காரணமாகவும், சேரும் சகதியுமாக இருந்த காரணத்தினாலும் துசாய் படா என்ற கிராமம் வரை மட்டுமே ஆம்புலன்ஸ் வந்தது. அதற்கு மேல் செல்ல முடியவில்லை.இதனால், கிராம மக்கள் சேர்ந்து கர்ப்பிணி சுனாய் போஜை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அதை துணி மூலம் மூங்கிலில் கட்டினர்.
பின்னர், அப்பெண்ணை 10 கி.மீ. தூரம் வரை தங்கள் தோளில் சுமந்து சென்று ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்தை அடைந்தனர்.இதையடுத்து, கைராபுட் அரசு சுகாதார மையத்திற்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மாலை 6 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர்.