புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொட்டகண்ணஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி உள்ளார். தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர். இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.
இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷே அவரது மனைவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்றுமுன்தினம் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் முழு உடலையும் மடித்து ஒரு டிராலி பையில் (சூட்கேஸ்) அடைத்து குளியலறையில் வைத்துவிட்டு மாமியார் வீட்டாருக்கு போன் செய்து உங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதன்பின் புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளியலறையில் இருந்த கௌரி அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இததையடுத்து புனேவுக்கு தப்பி செல்ல முயன்ற ராகேஷையும் கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை. அது அப்படியே இருந்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும் என்றனர்.