கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரதான சந்தேக நபரான பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோரை பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் தாயான சேசத்புர தேவகே சமந்தி மற்றும் சகோதரரான பிங் புர தேவகே சமிது திவங்க வீரசிங்க ஆகியோர் இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பில் தெளிவான அறிவு இருந்ததாகவும், அவர்கள் தகவல்களை மறைத்து வைத்திருப்பது விசாரணைகளில் தெரியவந்ததாகவும் தெரிவித்தனர்.இந்த சம்பவத்திற்கு முன்னர், துப்பாக்கிதாரியின் மெசஞ்சர் கணக்கிலிருந்து ‘நீதிமன்றத்திற்கு அருகில் சஞ்சீவவை அடிக்கிறோம்’ என்று பிரதான சந்தேக நபர் தனது சகோதரருக்கு செய்தி அனுப்பியிருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின்னர் ‘வேலை முடிந்தது’ என்று மற்றொரு செய்தியை அனுப்பியிருந்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.
மேலும், பிரதான சந்தேக நபர் பண பரிமாற்றங்களை மேற்கொண்டது, கைது செய்யப்பட்ட அவரது தாயின் வங்கி கணக்கு மூலமாகவே நடந்துள்ளதாகவும், தாக்குதலுக்கு பின்னர் அவர் நீர்க்கொழும்பு பிரதேசத்தில் ஆடைகளை வாங்கியதும் தாயின் வங்கி கணக்கு மூலமாகவே எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி, இந்த படுகொலைக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் மற்றும் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.