கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கெஹல்பத்தர பத்மே என்ற குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கெஹல்பத்தர பத்மேவின் பிரிவுடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரையும் கொலை செய்யப்போவதாக கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவு மிரட்டியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகைய சூழலில், பன்னலவில் உள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களிடம் விசாரித்தபோது, துபாயைச் சேர்ந்த சமீரா என்ற குற்றவாளியிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த வீட்டை வீடியோ எடுத்ததாகக் கூறினர்.
வீட்டிற்கு செல்லும் வழியை வீடியோ எடுத்து தமக்கு அனுப்புமாறு துபாய் சமீரா அறிவுறுத்தியதாகவும், அவ்வப்போது அவர் போதைப்பொருள் அருந்துவதற்காக பணம் கொடுத்ததால் அவ்வாறு செய்ததாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பன்னல கொஸ்வத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இருவரும் தயாராகி வந்ததாக சந்தேகிக்கப்படுவதால், அவர்கள் நாளை (27) வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதால், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளது.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக 16 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் கொலை செய்யப்பட்ட நாளில் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகளும் அடங்குகின்றனர். மேலும் 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை, 9 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு இருந்ததால், அவரை ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதே நாளில் 5ஆம் இலக்க நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு இருந்ததால், அவர் அங்கு ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூஸா சிறைச்சாலை வளாகத்தில் ஒரு கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலதிக விசாரணைக்காக அது உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.