வடமாகாணத்தின் இளைஞர்கள் மத்தியில் கலை துறை சார்ந்த ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்மை காலங்களாக ஓவியம், சிற்பம் போன்ற துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பும், படைப்புக்களும் அதிகரித்து வருகிறது.இவ்வாறான பின்னணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் கமல ரூபன் உருவாக்கியுள்ள கலைப்படைப்புக்கள் அவருடைய கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளும் பலரையும் கவர்ந்துள்ளது.கமல ரூபன் ஒரு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் அளவுக்கு அதிகமான ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்படைப்புக்களை தனது பல்கலைகழக கல்வி செயற்பாடுளின் போது அதே நேரம் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மாத்திரம் உருவாக்கி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.கிளிநொச்சியில் மிகவும் சாதாரண பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் கமல ரூபன் அவரின் இரு அண்ணன்கள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.தந்தை ஒரு தச்சு தொழிலாளி, இவ்வாறான ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் கல்வியில் சிறந்த பெறுபேற்றை பெற்று யாழ். பல்கலைக்கழகம் சென்றார்.
பல்கலைக்கழகத்தில் பல பாட தேர்வுகள் இருந்த போதிலும் தந்தை ஒரு தச்சு தொழிலாளியாக இருந்தமையினால் சிறுவயதில் இருந்தே மரச்செதுக்கல் வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம் காணப்பட்டமையால் கமல ரூபன் கலை துறையில் பல பாடங்கள் இருந்த போது இந்த பாடத்தை தெரிவு செய்து தனது அடையாளத்தை மெல்ல மெல்ல உருவாக்கி வருகிறார்.கமல ரூபனின் கலை படைப்புக்கள் ஆழமான கருத்துக்களை நேர்த்தியாக இலகுவாக வெளிப்படுத்த கூடியதாக காணப்படுகின்றது.அதே நேரம் கலை துறையில் பாரம்பரியமாக பின்பற்றுகின்ற செயற்பாடுகளுன் மட்டும் நின்று விடாது புதிய தொழில் நுட்பங்களையும் தனது படைப்புகளில் உட்புகுத்தி அதிலும் வெற்றி கண்டுள்ளார்.கமல ரூபனினால் வரையப்பட்ட சில ஓவியங்கள் செதுக்கப்பட்ட சிலைகள் தத்துரூபனாதாக காணப்படுவதுடன் பிரதி இட கூடிய நபரை கண் முன் நிறுத்த கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு பல திறமைகளை கொண்ட கமல ரூபன் வடமாகாணத்தில் உள்ள கலைப்படப்பாளர்களுக்கு ஒரு குறியீடாகவும் கலைத்துறை மீதான ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு ஊடகமாக இருக்கின்றார்.தற்போது சிறிய அளவிலான தொழில் முயற்சி ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்திருக்கும் கமலரூபன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தனது கலைப்படைப்புகளை உள்ளூரிலும் வெளிநாடுகளுக்கும் சந்தைப்படுத்தி வருகிறார்.கலைத்துறை சார்ந்த படைப்புக்களுக்கான சந்தை வாய்ப்புகள் என்பது எமது நாட்டில் குறைவாக காணப்படுகின்றது. பலரது கலைப்படைப்புக்கள் தற்போது வீதிகளிலே காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.