வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 83 குடும்பங்களுக்கான காணி உரித்துக்கான பத்திரங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் 25 வருடங்களாக அவற்றை பெறுவதற்கு காணி உரிமையாளர்கள் பல்வேறு தரப்பினர்களுடன் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.இந்நிலையில் இன்று (25) குறித்த காணி உரிமையாளர்களுக்கான பத்திரங்களை வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் பிரதேச செயலத்திற்கு கிடைக்கப்பெற்று இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக 25 வருடமாக தமது காணிக்கான உரிமையை பெறுவதற்காக போராடியதன் பலனை அடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த காணிக்கான உரிமையை பெறுவதற்கு எந்த அரசியல்வாதிகளும் தமக்கு துணையாக இருக்கவில்லை எனவும் கவலை வெளியிட்டனர்.