10 இலட்சம் ரூபாய் பணமும், நான்கரை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போனமை தொடர்பில் கரந்தெனிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட எகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கரந்தெனிய காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார்.விசாரணைகளின் போது முறைப்பாடு செய்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தின் போது காணாமல் போன பணமும், நகைகளின் அடகு வைக்கப்பட்ட ரசீதுகளும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.முறைப்பாட்டாளர் காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த பணமும், நகையும் திருடு போய்விட்டதாக முறைப்பாட்டளரின் மனைவி கணவரிடம் கூறியுள்ளார்.
அது தொடர்பில் கரந்தெனிய காவல்துறைக்கு முறைப்பாடு செய்யுமாறும் மனைவி தனது கணவருக்குத் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் அவர் காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.காணாமல் போன தங்க நகைகள் வீட்டின் அறையொன்றிலிருந்த அலமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.மேலும் அந்த அறைக்கு தமது வீட்டில் உள்ள “சூட்டி” எனும் பெயர் கொண்ட கிளியைத் தவிர வெளிநபர்கள் யாரும் வர முடியாது என முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் திரைச்சீலையில் கிளி அமர்ந்திருப்பது வழக்கம் எனவும் உரிமையாளர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.அத்துடன் வெளிநபர் யாரும் அந்த அறைக்குள் நுழைந்தால் கிளி கீச்சிடும் எனவும், வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட போது வீட்டின் எஜமானி கைது செய்யப்பட்டார்.இதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.அதன் போது அந்தப் பெண் முரண்பாடான பதில்களை வழங்கியதால் காவல்துறையினருக்குப் பெண்ணின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.அதன் பின்னர் அந்த பெண்ணே பணத்தையும் நகையையும் திருடியுள்ளதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
காணாமல் போன பணம் வைக்கப்பட்டிருந்த பணப்பையை வீட்டின் குளியலறையிலிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர், காவல்துறையினரின் விசாரணைகளைத் திசை திருப்புவதற்காகப் பணமும் நகையும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆங்காங்கே மிளகாய்த் தூளை வீசியுள்ளார்.இதனைப் பரிசீலித்த காவல்துறையினர் வீசப்பட்டிருந்த மிளகாய்த் தூளும், அந்த நபரின் வீட்டிலிருந்த மிளகாய்த் தூளும் ஒன்று எனக் கண்டுபிடித்துள்ளனர்.பின்னர் கணவரின் பணத்தைத் திருடுவதற்காகச் சந்தேக நபர் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.