இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் குடகேன் நகரில் பிரதான சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே அங்கு 100 பேர் மட்டுமே தங்குவதற்கு இடம் இருப்பதாகவும், இதனால் கடுமையான கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் கைதிகள் குற்றம்சாட்டினர்.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறை அதிகாரிகளிடம் கைதிகள் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்களில் பலர் போராட்டத்தில் குதித்தனர்.எனினும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறையில் இருந்து தப்பியோட கைதிகள் முடிவு செய்தனர். இதற்கான சமயத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில் கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மிகுதியான காவலர்கள் பணியில் இல்லாததால் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிறையின் பிரதான கதவை உடைத்தனர்.பின்னர் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் 20 கைதிகளை கைது செய்தனர். அதேசமயம் தப்பியோடிய மற்ற கைதிகள் தலைமறைவாகினர். எனவே அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்கிடையே கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிய காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.