பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த மாதம் 14ஆம் திகதி ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஏற்கனவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட பாப்பரசருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமானது.தொடர் சிகிச்சையின் காரணமாக அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அவர் அபாய கட்டத்திலேயே இருப்பதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 2 வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அவர் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.