அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். மேலும், ஊழியர்கள் திங்கள் கிழமைக்குள் தங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவும் கோரியிருந்தார்.இந்த நிலையில், ஒருவார கால பணி குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், மஸ்க் கொடுத்த காலக்கெடு அமலில் தான் உள்ளது என்றும் ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியே ஆக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பாமல் இருக்க முடியாது என்று அரசின் மனிதவள துறையாக செயல்படும் நிர்வாக அலுவலகம் சார்பில் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.அரசு துறை ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் தாங்கள் மேற்கொண்ட பணிகள் என்னென்ன என்பதை விவரிக்க வேண்டும் என்று நிர்வாக அலுவலகம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிய அரசு ஊழியர்களை என்ன செய்வதென்றும் அவற்றை எப்படி ஆய்வு செய்வது என்பது குறித்து நிர்வாக அலுவலகம் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது.