Home » எமது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே நான் செயல்படுவேன் – இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதான முகாமையாளர்

எமது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே நான் செயல்படுவேன் – இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதான முகாமையாளர்

by newsteam
0 comments
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதான முகாமையாளர்

எமது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே நான் செயல்படுவேன். நடைமுறை பிரச்சினைகள் அவர்களுக்கு தான் தெரியும் என இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதான முகாமையாளர் கந்தசாமி கேதீசன் தெரிவித்துள்ளார்.01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தலைமையிலான கலந்துரையாடலில் இணக்கம் வெளியிட்டனர் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்திருந்தது.

இவ்வாறு ஆளுநரின் செயலக அறிவிப்புக்கு பதில் வழங்கும் முகமாக, இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 17.01.2025 அன்று எமக்கு வடக்கு மாகாண ஆளுநரால் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டோம். அந்த கூட்டத்தில் எமது இலங்கை போக்குவரத்து சபையில் தலைவரின் கடிதத்துக்கு அமைய தூர சேவை பேருந்துகள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து கடமையை ஆற்றுமாறு கேட்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரின் அறிவுறுத்தலின் படிதான் நாங்கள் செயற்படுவோம் என்று நாங்கள் தெரிவித்தோம்.

குறித்த கூட்டத்தில் கதைக்கப்பட்ட முக்கிய விடயங்களை தவிர்த்து ஏனைய விடயங்களை வெளிக் கொணரப்பட்டிருந்தன.

எமது தலைவரின் கடிதத்தில், எல்லா மாவட்டத்திற்குமான இணைந்த நேர அட்டவணையை தயாரித்து, எமது பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று தான் கடமையை ஆற்றும்படி தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதம் ஆளுநரிடம் இருக்கிறது.

My Image Description

இணைந்தநேர அட்டவணை ஒன்று முன்னாள் மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனால் தயாரிக்கப்பட்டு கையொப்பமிட்ட நிலையில் அதே செயல்படுத்தப்படாமல் இருக்கின்றது. அதில் பிழை என்று கூறி கடந்த ஆட்சியிலும் நாங்கள் மாகாணசபைக்கு சென்று அங்கு தயாரித்த இணைந்த நேர அட்டவணையும் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றது.

எமது தலைமைக் காரியாலய செயலாற்று முகாமையாளரின் ஒப்புதலின் அடிப்படையில் இணைந்தநேர அட்டவணை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தும்போதும் தனியார் துறை தமது பேருந்து நிலையத்தில் இருந்தும், நாங்கள் எங்களது பேருந்து நிலையத்திலிருந்தும் தான் சேவையை புரிவோம்.

ஆளுநரின் கூட்டத்தில் எங்களால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை தவிர்த்து, நீண்ட காலத்திட்டமாக புகையிரத நிலையத்தில் பேருந்து நிலையம் கட்டு தருவதாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி புகையிட நிலையத்தில் பேருந்து நிலையம் கட்டித் தந்தாலும், எமக்கும் தனியார் துறைக்கும் தனித்தனியாக பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும். எங்களது தொழிலாளரின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்கேயும் செயலாற்ற நாங்கள் தயாரில்லை என்றார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!