இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இடையே முந்தைய அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்த கருத்து உண்மையென எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, இந்தியன் ஓயில் நிறுவனம், ஆர்.எம். பார்க் தனியார் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால், எரிபொருள் விலையைக் குறைத்தால், அந்த நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நேற்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மேலும் கூறினார்.