கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளில் நேற்று (29) இரவு பலத்த காற்று வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கொழும்பு – காலி பிரதான வீதியில் கொள்ளுப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை இடையே பெரிய மரங்கள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், கிராண்ட்பாஸ் உட்பட நகரின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.கிராண்ட்பாஸில் உள்ள செயின்ட் ஜோசப் வீதியில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அருகில. இருந்த ஆறு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், வீடுகளில் வசித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எனத் தெரிவித்தார்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.