உலகில் பலருக்கும் நல்ல வேலை கிடைப்பதென்பதே அரிதாக இருக்கிறது. அப்படி கிடைக்கும் வேலையைப் பலரும் தக்கவைக்கவே ஆசைப்படுவர். அதாவது, நிறுவனம் எவ்வளவு நெருக்கடி அதைத் தாக்குப் பிடித்து வேலை செய்பவர்கள் அதிகம். உதாரணத்திற்கு உரிய நேரத்திற்கு வீட்டுக்குக்கூடச் செல்லாமல் அலுவலகத்திலேயே இருப்பார்கள். ஆனால், சிலரோ அலுவலக வேலை நேரம் முடிந்ததும், வேகமாய் வீட்டுக்குப் புறப்படவே தயாராவார்கள். இதில் இன்னும் சிலர், அலுவலகம் வேலை நேரம் முடிவதற்கு முன்பாகவே புறப்படுபவர்களும் உண்டு. அப்படி, ஓர் ஊழியர் வேலை நேரத்துக்கு முன்பாக, அதாவது ஒரு நிமிடத்திற்கு முன்னதாக புறப்பட்டுச் சென்றதால் அந்த ஊழியர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சீனாவில் நடைபெற்றது என்றாலும், உலகளவில் வைரலாகி வருகிறது.சீனாவின் குவாங்டொங் மாகாணத்தைச் சேர்ந்தவர், வாங். இவர், குவாங்சோவை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் மூன்று வருடங்களாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஒருநாள் ஒரு நிமிடம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேறியுள்ளார். இதைக் கண்டுகொண்ட அந்த நிறுவனம் அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், இதேபோல் ஒரு மாதத்தில் ஆறு முறை வாங் வேலையை விட்டுச் சீக்கிரமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது புகார் அளித்து, அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த நிறுவனம் எந்த ஓர் எச்சரிக்கையும் கொடுக்காமல் திடீரென அவரை வேலையில் இருந்து நீக்கியது தவறு என்றும் சட்டவிரோதமானது என்றும், அதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும், அது நியாயமானதல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில், ஒரு சீன நபர், ஏற்கெனவே கூடுதல் நேரம் வேலை செய்து, சிறிது நேரம் தூங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு 350,000 யுவான் (ரூ. 41.6 லட்சம்) இழப்பீடு வழங்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பெய்ஜிங் சட்ட நிறுவனம் ஒன்று ஊழியர்களின் வேலை நேரத்தை சட்டவிரோதமாக நீட்டித்த பிறகு, சரியான நடவடிக்கைகளை எடுக்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.