யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள அணையா தீபம் போராட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.இறுதி நாளாக இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் குறித்து நேற்றைய தினம், போராட்டத்தை ஏற்பாடு செய்த குழுவினர் விளக்கமளித்திருந்தனர்.
கடந்த இரு தினங்கள் போன்று இன்று அகவணக்கம், மலரஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமாகும் இந்த போராட்டம் 12 மணிக்கு புதைகுழி இருக்கும் சிந்துபாத்தி மயானத்திலிருந்து ஆரம்பமாகி பேரணியாக சென்று ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்துக்குச் சென்று கடிதமொன்று கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு தங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், அவர் சிந்துபாத்தி மனித புதைகுழிக்கு வருகைதருவதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.