உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். தகாத வார்த்தைகளால் பேசியும் வந்துள்ளார். பல நாட்களாக இது நீடித்து வந்த நிலையில், பொறுத்து பார்த்த அந்த சிறுமி ஒரு கட்டத்தில் தெருவில் வைத்து, அந்த வாலிபரின் சட்டை காலரை பிடித்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காலணிகளை எடுத்து அடித்தும், கன்னத்தில் அறைந்தும் தக்க பாடம் புகட்டினார்.இதனை, பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றனர். சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த சிறுமி, பெரிய கல் ஒன்றை எடுத்து, தொல்லை கொடுத்த அந்த வாலிபரை அடிக்கவும் பாய்ந்துள்ளார். பின்னர், கல்லை கீழே போட்டு விட்டார்.இந்நிலையில், கங்காகட் கொத்வாலி காவல் நிலைய பகுதியில் போனி சாலையில் அந்த வாலிபர் மீண்டும், பள்ளி மாணவியை மறித்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். தன்னுடன் வரும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி மீண்டும் வாலிபரை சட்டையை பிடித்து தாக்கினார்.எனினும், இதுபற்றி அந்த பள்ளி மாணவி போலீசில் புகார் அளிக்க மறுத்து விட்டார். அமைதியை சீர்குலைக்க முயற்சித்த பிரிவில் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போலீசார் பிடித்து சென்றனர். அந்நபர் ஆகாஷ் (வயது 20) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் ஈ-ரிக்சா ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.அதுபற்றிய வீடியோ நேற்று வைரலானது. இதுபற்றி கங்காகட் கொத்வாலி காவல் நிலையத்தின் உயரதிகாரி பிரமோத் குமார் மிஷ்ரா கூறும்போது, உன்னாவ் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற அந்த வாலிபருக்கு எதிராக, மாணவி புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், அமைதியை சீர்குலைக்க முயற்சித்த பிரிவில் வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் கைது செய்து, அன்றிரவே ஜாமீனில் ஆகாஷ் விடுதலையானார் என கூறியுள்ளார்.அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறும்போது, பெண்களை சீண்டி, தகாத வார்த்தைகளால் பேசி செல்லும் இதுபோன்ற ரவுடிகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அதனால், போலீசாரின் கூடுதல் கண்காணிப்பு தேவையாக உள்ளது என தெரிவித்தனர்.