நுவரெலியாவில் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக பிற்பகல் நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.இன்று (28) பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவின் தாழ்நிலப் பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பிரதான வீதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால், பல மணி நேரங்களுக்கு போக்குவரத்து முற்றாக தடைபட்டது.இதேவேளை, நுவரெலியா-உடப்புசல்லாவ மற்றும் நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட், கிளாரண்டன், மற்றும் கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகள் மற்றும் பல குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நுவரெலியா-கந்தபளை பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்தோடியதால் பெருமளவிலான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இது விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.நுவரெலியா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் வெள்ளநீர் புகுந்ததால் வணிக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் தடைபட்டுள்ளது.வெள்ளப்பெருக்குடன், பல பகுதிகளில் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.