அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவர்களுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்திருந்தார். ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர் தடை விதித்திருந்தார். இந்தத் தடை உத்தரவை ஜோ பைடன் 2021-ஆம் ஆண்டு நீக்கி உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.