ஆந்திர மாநிலம் மயிலவரத்தை சேர்ந்தவர் ராஜா சங்கர். இவரது மனைவி சந்திரிகா. இவர்களுக்கு லட்சுமி ஹிரண்யா (வயது 9), லீலா சாயி (7) என ஒரு மகளும், மகனும் உள்ளனர்.சந்திரிகா பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை வைத்து, மயிலவரத்தில் குழந்தைகளுடன் ராஜா சங்கர் வசித்து வந்தார். வெளிநாட்டில் உள்ள மனைவியின் நடத்தை மீது ரவிசங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மனைவியுடன் தொலைபேசியில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.மனைவி மீதான கோபம் காரணமாக 2 குழந்தைகளையும் கொலை செய்ய ராஜாசங்கர் முடிவு செய்தார். எனவே உணவில் பூச்சி மருந்து கலந்து அவர்களுக்கு கொடுத்தார். ஆனால் அதனை சாப்பிட குழந்தைகள் மறுத்து விட்டனர்.
இதற்கிடையே கடந்த 13-ம் தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்த சிறுமி லட்சுமி ஹிரண்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு திணற துடிதுடிக்க வைத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னா் சிறுவன் லீலாசாயியை சேலையால் தூக்குப்போட்டு கொடூரமாக கொலை செய்தார். பின்னர் இருவரையும் தூங்குவது போல படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வீட்டை பூட்டி விட்டு அவர் தலைமறைவானார்.முன்னதாக குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ராஜா சங்கர் கடிதம் ஒன்றை வீட்டில் எழுதி வைத்து சென்றார். 2 நாட்களாகியும் வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ராஜா சங்கர் விசாகப்பட்டினத்திற்கு சென்று புதிய சிம்கார்டு ஒன்றை வாங்கினார். செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், ஜி.குண்டூரை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்து பணம் கேட்டார். இதுகுறித்து அந்த நபர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நைசாக ராஜா சங்கரை தொடர்பு கொண்டு, பணம் தருவதாகவும், இருப்பிடத்தை கூற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை உண்மை என நம்பிய ராஜா சங்கர் விசாகப்பட்டினத்தில் இருப்பதாக தெரிவித்தார்.தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த ராஜா சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.