ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி க்ஷிராந்தி ராஜபக்சவின் சகோதரருமான நிஷாந்த விக்ரமசிங்கவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) பிறப்பித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிஷாந்த விக்ரமசிங்க, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகளை நிறைவு செய்து சாட்சியங்களை எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.நிஷாந்த விக்ரமசிங்க, விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந் நிலையில் அவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.