ஹட்டன், ஷெனன் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் நேற்று (16) மாலை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை ஜூன் 15 அன்று திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தையை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அங்கு வைத்தியர் இல்லாததால், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தோட்ட நிர்வாகத்திடம் வாகன உதவி கோரப்பட்டது.எனினும், சாரதி இல்லை எனக் கூறி தோட்ட நிர்வாகம் வாகனம் வழங்க மறுத்ததால், குழந்தை தனியார் வாகனத்தில் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஆனால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.
தோட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டி, ஷெனன் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.இதற்கிடையில், குழந்தையின் பிரேத பரிசோதனை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டது. தொண்டையில் பால் புரைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டதே குழந்தையின் மரணத்திற்கு காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து தோட்ட நிர்வாகத்திடம் விசாரிக்க முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லை.