2017 மார்ச் 8ம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடங்கப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (31) 3007 ஆவது நாட்களை எட்டியுள்ளது.இதனை முன்னிட்டு, மாங்குளம் நகரில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாதந்தோறும் இவ்வாறு மாபெரும் முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் உறவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்நாளை குறிப்பாக நினைவுகூர்ந்தனர்.இலங்கையில் நீதி கிடைக்காது எனும் நம்பிக்கையுடன், சர்வதேசம் ஊடாகவே தமக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.இன்றைய போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.இந்த போராட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும் என உறவுகள் தெரிவித்துள்ளனர்.