படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.கொலை செய்யப்பட்டவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரே குழந்தையின் தாயாவார்.அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ சேவைகள் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள ஒரு அறையில் படுக்கையிலேய பெண் ஒருவர் மர்மமாக இறந்துள்ளதாக கடந்த 13 ஆம் திகதி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தமது மனைவி பரீட்சைக்காக படித்துவிட்டு மாலை 4 மணியளவில் நித்திரை செய்ய படுக்கைக்குச் சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பிய போதும் அவர் எழும்பவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.இதனை அடுத்து தாம் அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அறிந்து 1990 அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும், மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எழுந்த சந்தேகங்களின் அடிப்படையில், மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தியதுடன் அது தொடர்பான சோதனைகளையும் முன்னெடுத்தனர்.இந்நிலையில், இன்று தம்புள்ளை வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் மருத்துவர் கே.என்.சி. சேனாரத்னவினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.இதன்போது தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும் குறித்த தம்பதியரின் 5 வயது குழந்தையின் சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் குழந்தை மிகவும் பயந்து போயிருந்தமையினால் இந்த மரணம் தொடர்பாக மேலும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு, கொலை நடந்த விதம் குறித்த தகவல்களை அறியபொலிஸார் தொடர்ந்தும் அவரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.