20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது கணவர் குறித்து முகநூல் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு,
மஹிந்தானந்த அளுத்கமகே, 2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.எனது கணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். அவருக்காக செய்வதற்கு இன்னும் எதுவும் என்னிடம் மீதி இல்லை. இதனால் நான் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இனி என்னை கொன்றாலும் எனக்கு வலிக்க போவதில்லை.எனது கணவர் அப்பாவி என எனக்கு தெரியும். அவர் மிகவும் அன்பானவர். இப்போது நான் தனிமையில் உள்ளேன்.எனது கணவர் அவரது அரசியல் கடமைகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்த்தார்.குடும்பத்தை போன்றே தனது அரசியல் கடமைகளையும் கவனித்தார்.எனது கணவர் தனது அரசியல் வாழ்கையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தார். அவர் குண்டு வெடிப்பினாலும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது காலில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
எனது கணவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.எனக்கும் எனது கணவருக்கும் எதிராக பல கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.இதனால் நான் எனது கணவரை விட்டு பிரிந்து அமேரிக்காவுக்கும் சென்றேன். ஆனால் அவரை பிரிந்து என்னால் இருக்க முடியாததால் எங்களது நண்பன் டிலான் பெரேராவின் உதவியுடன் மீண்டும் கணவருடன் இணைந்தேன்.எனது கணவரின் சொத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை செய்தனர்.ஆனால எனது கணவர் அந்த விசாரணைகளுக்கு தைரியமாக முகங்கொடுத்தார்.தனது அரசியல் கடமைகளையும் தவறாமல் செய்தார்.எனது கணவருக்கு எதிராக 12 வருட காலங்களாக சுமார் 14 வழக்குகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அவர் இரு தடவைகள் சிறைச்சாலைக்கும் சென்றார்.
இதனையடுத்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில் எனது கணவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் எனது கணவருக்கு எதிராக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நீதியை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும்.ஆனால் எனது கணவருக்கு அரசாங்க அதிகாரத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதா?
எனது கணவருக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் 5 மாத காலப்பகுதிக்குள் 2 நீதிபதிகள் மாற்றப்பட்டனர்.
எனது கணவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன் என பதிவிட்டிருந்தார்.