மட்டக்களப்பு முனைக்காடு கிராம ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை( 02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இடம்பெற்று வருவதுடன் புதன்கிழமை( 02) அதிகாலை விசேட பூசை இடம்பெற்ற நிலையில் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்ற போது அருகில் இருந்த மின் குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான செந்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் நாகதம்பிரான் ஆலயத்தில் சிறு வயது முதல் தொண்டாற்றி வருவதுடன் நல் ஒழுக்கமுள்ள இறை பக்தியுள்ள ஒருவர் என்றும் அவரது துரதிர்ஷ்டவசமான இழப்பு ஆலய நிர்வாகத்தையும் கிராம பொது மக்களையும் கவலை கொள்ளச் செய்கிறது. பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் ஒழுக்கமுள்ள மாணவனாக கலாசார வாத்திய இன்னிசைக் குழுவிலும் இணைந்து செயற்ப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது