இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் வகையில் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியமைக்காக, 21 வயதுடைய மொஹமட் ரிஃபாய் மொஹமட் சுஹைல் என்ற இளைஞர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.மாவனெல்லையைச் சேர்ந்த சுஹைல், தனது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாதமைக்காக, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.பின்னர் தமது அடையாள அட்டையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.எனினும், இன்ஸ்டாகிராம் காணொளி தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரின் வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக காவல்துறை தரப்பை மேற்கோள் காட்டி குறித்த சர்வதேச செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.