ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல என்றும் வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆடு, மாடுகள் இன்றி இயற்கை விவசாயம் கிடையாது.பால் இருக்கும் வரை நாட்டில் பசி பட்டினி இருக்காது.இந்தநிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதியன்று தேனி மலையடிவாரத்தில் தாம் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்போவதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.மதுரையில் நேற்று ‘மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற ஆடு, மாடுகளின் மாநாடு ஒன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் இடம்பெற்றது.இதன்போது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன், ஆடுகளும் மாடுகளும் நிறுத்தப்பட்டிருந்தன.இந்த மாநாட்டில் உரையாற்றிய சீமான், தமிழகத்தில் 12 இலட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளதாகக் கூறினார். எனினும் அவற்றை ஆக்கிரமித்து அழித்துவிட்டனர். தமிழகத்தில் 138,000 கோடி இந்திய ரூபாய் அளவுக்கு, பாலுக்கான சந்தை மதிப்பு உள்ளது. இருந்தாலும், வெறும் 50,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள சாராயத்தைக் குடிக்க வைத்துக் குடும்பப்பெண்களின் வாழ்க்கையைத் தமிழக அரசாங்கம் நாசமாக்குகிறது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.