கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவின் கவடிகரஹட்டியைச் சேர்ந்தவர் நக்மா. பிரச்னை காரணமாக, இவர் தன்னுடைய முன்னாள் கணவரை விவாகரத்து செய்தார். எனினும், இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு மகன் உண்டு. அவர் நக்மாவிடம் வளர்ந்தார். விவாகரத்துக்குப் பிறகு இருவருமே விரைவில் வேறு திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும், அவர்களுக்குள் சண்டை நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில், அந்த எட்டு வயது மகன் தனது தந்தையை அடிக்கடி காணச் சென்றுள்ளார். இது, நக்மாவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அந்தச் சிறுவன் மீது அவர் ஆத்திரத்தைக் காட்டியுள்ளார்.ஒருகட்டத்தில் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நக்மா, தன் மகனுக்கு கையிலும் காலிலும் சூடு போட்டுள்ளார். இதுகுறித்து சிறுவனின் பாட்டி ஷம்ஷாத், ”இரண்டாவது திருமணத்தில் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையே இது அனைத்திற்கும் காரணம். சிறுவன், சித்திரவதையைத் தாங்க முடியாமல் எங்கள் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டான்” எனத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நக்மா மீது சிறுவனின் பாட்டி குடும்பத்தினர் சித்ரதுர்கா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.