தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.வார இறுதி விடுமுறை நாளான இன்றும் (02) எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.எனினும், மூன்று சதவீத கழிவு கொடுப்பனவு பிரச்சினைக்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதேநேரம் நாடு முழுவதும் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று முன்தினம் முதல் நிலவிய வாகன வரிசைகள் நேற்றிரவு முதல் குறைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 3 சதவீத கழிவு கொடுப்பனவு வழங்கப்படுகிறது.எனினும், நேற்று (01) முதல் இந்த ஒப்பந்தத்தை நிறைவுறுத்துவதற்கு இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அத்துடன் குறித்த கழிவு தொகையை நிர்ணயிப்பதற்காக ஒரு புதிய முறைமை ஒன்றும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நிரப்பு நிலையங்களுக்கான செலவு, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இடையிலான தூரம், மாதாந்த விற்பனை அளவு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த 5 வருட காலமாக பராமரிக்கப்படும் தரவு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வகைப்படுத்தப்படும்.அதனடிப்படையிலேயே அவற்றுக்கு வழங்கப்படும் கழிவு கொடுப்பனவின் அளவு தீர்மானிக்கப்படவுள்ளது.