ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.மேலும், சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சாமர சம்பத் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாமர சம்பத் தசநாயக்க, 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், மற்றுமொரு வழக்கு தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் அவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.