கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் மைலப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகர்ஜுனா (வயது 25). இவர் மற்றொரு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு நாகர்ஜுனாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து இருவரும் வீட்டை விட்டுவெளியேறி கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்த தம்பதி, பாதுகாப்பு கேட்டு சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இருவரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த சமயத்திலும் இளம்பெண், தனது காதல் கணவருடன் செல்வதாக கூறிச் சென்றார். திருமணமாகி 2 வாரம் கடந்த நிலையில் அந்த புதுப்பெண் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசில், ஒரு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். அதில், தான் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதால் எனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.எனவே நான் நாகர்ஜுனாவை பிரிந்து எனது பெற்றோருடன் செல்கிறேன் என கூறியுள்ளார். பின்னர் காதல் கணவரை பிரிந்து அந்த பெண் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் நாகர்ஜுனா தனது மனைவி தன்னை பிரிந்து சென்றதால் சோகத்தில் இருந்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.