மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாத்தறை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரவு 8.00 மணியளவில் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலைக்குள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதை அடுத்து இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.இந்த பதற்றமான சூழ்நிலையுடன், சிறைச்சாலையின் மேல் பாதுகாப்பு அறைகளில் இருந்த சிறை அதிகாரிகளை கைதிகள் கற்களாலும் வேர்களாலும் தாக்கியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த அமைதியின்மையால் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்தார்.இரவு 8.00 மணியளவில் ஏற்பட்ட நிலைமை பின்னர் கட்டுக்குள் இருந்த நிலையில், நள்ளிரவு கைதிகள் மீண்டும் அமைதியின்மையில் ஈடுபடத் தொடங்கி சிறைக்குள் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க ஆரம்பித்ததால், சிறைச்சாலையைப் பாதுகாக்க பொலிஸார் வரவழைக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு கண்ணீர் புகைக் குண்டுகள் வானத்தை நோக்கி சுடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சிறையில் இருந்த 25 பெண் கைதிகளை அவர்களின் பாதுகாப்புக்காக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இன்று(23) அதிகாலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வந்ததாகவும், சிறைச்சாலையின் சேமிப்பு அறை மற்றும் பல பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளை வரவழைக்கவும், தீயணைப்பு படையினரை தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தக் அமைதியின்மையால் எந்தக் கைதிகளும் காயமடையவோ அல்லது உயிராபத்து ஏற்படவோ இல்லை என்று சிறைச்சாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது குறித்து கைதிகளின் உறவினர்கள் கவலைப்பட வேண்டாம் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.