காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தபடி வாகா எல்லை மூடப்பட்டது. அங்கு ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அறிவிப்பை பாகிஸ்தானும் வெளியிட்டுள்ளது.இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.இந்த நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சண்டையை ஆரம்பித்தது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுகிறது.