ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் அவரை கத்தியால் குத்தி விட்டு, தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்து விட்டார். இந்த தாக்குதலுக்கு உடனடியாக ஒருவரும் பொறுப்பேற்கவில்லை. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.பாகேரி, கடந்த காலத்தில் புரட்சிகர கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். அந்த கோர்ட்டில், பாதுகாப்பு மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், பாகேரியின் படுகொலை நடந்துள்ளது.ஈரான் நாட்டில் கடந்த காலங்களில் நீதிபதிகள் படுகொலை செய்யப்படுவது என்பது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் முக்கிய நீதிபதிகள் 2 பேரை, நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அவர்கள் 1980-ம் ஆண்டு பெரிய அளவில் நடந்த எதிர்ப்பாளர்களின் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.