ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.தனது இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய விளானில் இருப்பதாக கூறும் தனது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா என கேள்வி எழுப்பினார்
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்
வடக்கு,கிழக்கில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்று காணப்படுகிறார்கள்.அவர்களுக்கு அர்ச்சுனாவால் காணியை கொடுக்க முடியுமா?
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராம நாதன் மண்டை தீவில் கடற்படை சுவீகரித்துள்ள காணியை மக்களுக்கு முடிந்தால் பெற்றுக் கொடுக்கட்டும்.காணி தொடர்பான முழுமையான காணி விபரங்கள் அர்ச்சுனா உட்பட்ட எந்தவித பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கிடையாது.இவர்கள் காணி தொடர்பில் எப்படி சரியான விடையங்களை கொண்டு செல்ல முடியும்?
வடமராட்சி கிழக்கில் கோரியடியில் இருந்து சுண்டிக்குளம் வரை மக்களின் காணிகள் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.தேசிய பூங்காவில் மக்கள் இருக்க முடியாது.ஆனால் மக்கள் வசிக்கின்றார்கள்.காலப்போக்கில் அவர்களை காணியை விட்டு அகற்றுவார்கள்.இது தொடர்பான விடையங்களை அர்ச்சுனா முதலில் தேடி அறிந்து பேச வேண்டும்
மக்களின் காணி பிரச்சனைகள் எங்கெல்லாம் காணப்படுகின்றது என்பதனை அர்ச்சுனா எங்களிடம் கேட்டால் கூட்டிச் சென்று காட்டுவோம்
மக்களின் காணி என்று தெரிந்தும் அதை அபகரித்து விகாரைகளை கட்டினார்கள்,முகாம்களை அமைத்தார்கள்.
மக்களின் காணியை அபகரித்து என்ன கட்டினாலும் அதை இடிக்கத்தான் வேண்டும் அதை தவறென கூறும் அர்ச்சுனா எம்பி முதலில் காணி தொடர்பான முழுமையான ஆவணங்களை தேடி அறிந்து கொண்டு பேச வேண்டுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.