தங்காலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி, பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய தங்காலை சீனிமோதர பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளில், வீடு அமைந்துள்ள காணியில் இரண்டு லொறிகள் காணப்பட்டதுடன், அவற்றில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.இந்த விசாரணைக்கு அமைய செப்டம்பர் 22 முதல் நேற்று (01) வரை மொத்தம் ஐந்து சந்தேக நபர்களும் சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் தற்போது நன்னடத்தையில் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஐந்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், இன்று (02) நடத்தப்பட்ட விசேட விசாரணையில், கடலில் இருந்து கரைக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த படகின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு தங்காலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட நபர் 50 வயதுடைய தெவிநுவர பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.அத்துடன் தங்காலை குற்றவியல் விசாரணை பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, இந்த மோசடிக்கு உதவியதற்காகவும், ஹெரோயின் வைத்திருந்ததற்காகவும் பெலியத்தவைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டார்.இந்த இரண்டு நபர்களும் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தங்காலையில் 16 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் போதைப்பொருள் வழக்கில் கைது
5