மராட்டிய மாநிலம் நாக்பூரில் பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரது பெயர் சமீரா பாத்திமா. நாக்பூரில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. நன்றாக சென்ற திருமண வாழ்க்கையில் ஆசிரியைக்கு மனதில் விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது.அவர் தனது அழகை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். இதற்காக அவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 2-வது திருமணத்துக்கு தயாரானார். மறுமணம் செய்வதற்கான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த பலர் அவரை சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்டனர்.அவர்களிடம் தனது முதல் திருமண வாழ்க்கையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதனால் அவரை பிரிந்துவிட்டதாகவும் அனுதாபம் தேடினார். இவரை அப்பாவி என நம்பி வலையில் விழும் நபர்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். பின்னர் சிறிது நாட்களில் சமீரா பாத்திமா தனது சுயரூபத்தை காட்ட தொடங்கினார். தன்னை கொடுமை படுத்தியதாக பொய் புகார் அளிப்பேன், அப்படி செய்யக்கூடாது என்றால் தனக்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். இதில் பயந்துபோகும் நபர்களிடம் முடிந்தவரை பணம் கறந்துவிட்டு தப்பித்து வந்தார்.
குறிப்பாக அவர் முஸ்லிம் சமூகத்தில் உள்ள பணக்கார மற்றும் திருமணமாகாத வாலிபர்களை குறிவைத்தே இந்த மோசடியை அரங்கேற்றினார். ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரும் இவரது மோசடி வலையில் சிக்கியதாக தெரிகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 8 ஆண்களை இதேபோன்று திருமணம் செய்து ஏமாற்றிய அவர், ஒருவரிடம் இருந்து ரூ.50 லட்சமும், மற்றொருவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பறித்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் நாக்பூர் போலீசார் சமீரா பாத்திமாவை வலைவீசி தேடி வந்தனர். இதை அறிந்த அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போதும் அவர் தனது கல்யாண ஆட்டத்தை நிறுத்தவில்லை. 9-வது முறையாக ஒரு பணக்காரரை வீழ்த்த திட்டமிட்டார். அதற்காக அவரை நாக்பூரில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வரவழைத்தார். இதனை மோப்பம் பிடித்த போலீசார் அந்த கடைக்கு சென்று கல்யாண ராணி சமீரா பாத்திமாவை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதுவரை 8 பேரை மட்டும் தான் அவர் ஏமாற்றினாரா? அல்லது அவரின் வலையில் வேறு யாரும் சிக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் சமீராவுக்கு ஒரு ரவுடி கும்பலும் உதவி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கும்பலையும் போலீசார் தேடி வருகின்றனர்.