யாழ். மாநகர சபையில் நடைபெற்ற இன்றைய(27) அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.சுகாதாரக் குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களின் போது இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, மாநகர சபை உறுப்பினர்கள் பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளை கதைப்பதற்கு நேரத்தை வழங்காமல் யாழ். முதல்வர் தட்டிக் கழித்து சென்றதாக மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,
யாழ்ப்பாணம் மாநகர சபையில் சுகாதாரக் குழுத் தெரிவிற்காக கடந்த 23ஆம் திகதி தொடங்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன் போது குழுக்களை தெரிவு செய்வதற்கு எங்களது சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தோம்.ஆனாலும் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பலரும் எழுந்து தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை கேட்ட போது, “எதை வேண்டுமானாலும் எழுத்தில் வழங்குங்கள்.இந்த கூட்டத்தில் எதுவும் செய்ய முடியாது. அடுத்த கூட்டத்தில் பார்க்கலாம்” எனக் கூறிவிட்டு முதல்வர் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.