ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் செம்மணி மனிதபுதைகுழியை பார்வையிடுவதற்கு தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அந்த பகுதியில் விஜயம் மேற்கொள்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும்தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது குறித்த-நாட்டின் நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால் மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கும் எந்த தடையையும் விதிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது – இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.
வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது, இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.