அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.