மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.இந்த நிலையில் தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் மற்றும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர்.குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன் ஏனைய பணத்தில் உடைகளை வாங்கியுள்ள அதேநேரத்தில், உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.