மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகியது.வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ஊடாக சென்று பிரதேச செயலகம் முன்பாக நிறைவடைந்தது.
இதில் தமிழர் வாழ்வியலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விவசாய முறைகள், நீர்பாசன முறைகள், உணவு தயாரித்தல், கைவினை உற்பத்திகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், கிராமிய கலை மரபுகள், கிராமிய உணவு பழக்கவழக்கம் உள்ளிட் பல்வேறு அம்சங்களை தாங்கிய 47 க்கும் மேற்பட்ட ஊர்திகள் இதன் போது பவனி வந்திருந்தன.இந்நிகழ்வில் வடமகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் இதில் கலந்துது கொண்டதுடன், வீதிகளில் மக்களும் குழுயிருந்து அதனை பார்த்து உற்சாகப்படுத்தினர்