ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.ஜப்பானின் பிரதமராக இருக்கும் ஷிகெரு இஷிபா லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த மேலவை தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடைந்தது. இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்தது
இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.கடந்த ஒரு மாதமாக இவ்வாறு கூறப்படும் கருத்துக்களை பிரதமர் புறக்கணித்து வந்தார்.ஆனால், நாளுக்கு நாள் அவரது ராஜினாமாவை கோரும் குரல்கள் வலுத்து வருகின்றன.குறிப்பாக, அவரது கட்சியில் இருக்கும் வலதுசாரிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில், கட்சி தலைமைப்பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்பது பற்றி நாளை லிபரல் டெமாக்ரடிக் கட்சி முடிவு செய்ய உள்ளது.அதை கட்சியின் நிர்வாகிகள் அங்கீகரிக்கும் பட்சத்தில், ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டியிருக்கும்.அதை தவிர்க்கும் நோக்கத்தில், அவர் தாமாகவே ராஜினாமா செய்ய முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.